Send As SMS

அந்நியலோகம்

My Photo
Name:Venkataramani
Location:California, United States

தமிழில் வலைப்பதிவுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக தோன்றிய அந்த காலத்தில் (2003) ஏதோ ஒரு ஆர்வக்கோளாறில் நானும் எழுத ஆரம்பித்தேன். நமக்கு பல விஷயங்களில் ஆர்வம் இருப்பதால், சில நாட்களுக்கு எதுவும் எழுதாமல் இருக்க வாய்ப்புண்டு. ஆனாலும், பீனிக்ஸ் பறவைபோல் மீண்டுவந்து கண்டிப்பாக இந்த வலைப்பதிவை இன்னும் பல வருடங்களுக்கு உயிருடன் வைத்திருப்பேன் :)

Wednesday, April 26, 2006

இட ஒதுக்கீடு - நடுநிலை அலசல் (நம்புங்கள்!)

சில நாட்களுக்கு முன் இட ஒதுக்கீடு பற்றி ஒரு பதிவு இட்டிருந்தேன். இதனால் பாதிக்கப்படப்போகும் எல்லா உயர்ஜாதியினரைப்போல நானும் இது நாட்டிற்கு சீர்கேடான ஒன்று என்று எழுதியிருந்தேன். பின்னர் சில நாட்கள் இது தொடர்பான பல்வேறு கட்டுரைகளை படித்தபின் என் கருத்துக்கள் சில மாறியுள்ளன. அதேசமயம் அரசாங்கத்தின் அணுகுமுறையில் உள்ள பல ஓட்டைகளும் வெளிச்சமாயின. இவற்றைப்பற்றி எழுதவேண்டுமென்று தோன்றியதால் இன்னுமொருபதிவு இடுகிறேன்.

இந்த விவகாரத்தை பற்றி எழுதப்படும் கட்டுரைகள் பெரும்பாலும் முற்றிலும் எதிர்ப்பாகவோ ('இந்தியா அழியும் காலம் தூரத்தில் இல்லை' வகை) அல்லது வெறிபிடித்த ஆதரவாகவோ ('அப்பாடா, பார்ப்பனர் எல்லாம் ஒழியட்டும்' வகை) உள்ளன. ஆனால், இரண்டு ஆங்கில கட்டுரைகள் இந்த விவகாரத்தை நடுநிலையாக அலசியதாக எனக்கு தோன்றியது.

ஒன்று Outlook பத்திரிக்கையில் வெளிவந்துள்ள இந்த கட்டுரை. IIT போன்ற கடினமான தேர்வுகள் வைக்கும் கல்விக்கூடங்களில் ஒதுக்கீட்டில் சேரும் SC, ST மாணவர்கள் ஒரு வருடத்திலேயே படிப்பை கைவிடுவதாகவோ இல்லை மிகக்குறைந்த மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெறுவதாகவோதான் இதுவரை கேள்விப்பட்டிருந்தேன். ஆனால் இந்த கட்டுரையில் ஒதுக்கீட்டில் சேர்ந்து படித்த நிறைய பேரின் வெற்றிகரமான வாழ்க்கையைப்பற்றி விவரித்துள்ளனர். IIT கரக்பூரின் Dean மிகச்சிலரே படிப்பை கைவிடுவதாக கூறியுள்ளார். சிலர் MIT போன்ற சிறந்த கல்விக்கூடங்களில் சேர்ந்தோ, AT&T போன்ற சிறந்த நிறுவனங்களில் பணிபுரிந்தோ தம்மை நிரூபித்துள்ளனர். சபாஷ்!! பள்ளிக்கல்வியின்போது SC, ST மாணவர்கள் பலர் dropout ஆவதால் அவர்கள் கல்லூரியிலும் தேர்ச்சிபெறுவது கடினம் என்று பலர் நினைப்பது உண்மை. ஆனால், +2 வரைக்கும் கடினமாக உழைத்து (ஒதுக்கீடு எதுவும் இல்லாமல்) ஓரளவுக்கு நல்ல மதிப்பெண் எடுத்துவிடுவதால், இட ஒதுக்கீடு என்று டானிக் இவர்களை மேலும் ஊக்கப்படுத்திவிடுகிறது போலும். கட்டுரையில் பேட்டி கண்ட பலர் இட ஒதுக்கீடு கல்லூரிவாசல் வரைதான் கொண்டு சேர்க்கும், அதற்குமேல் தேர்வில் வெற்றிபெறுவதும் நல்ல வேலையில் சேர்வதும் அவரவர் உழைப்பில்தான் என்பதை நன்கு அறிந்துள்ளனர்.

ஆனால் ஏழ்மையான குடும்பங்களைச் சேர்ந்த இவர்கள் நுழைவுத்தேர்வில் தேர்ச்சிபெற தங்களுக்கு அரசாங்கம் உதவி செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று நினைக்கின்றனர். இடங்களை மட்டும் ஒதுக்கிவிட்டு அவற்றை அடைவதற்கான தகுதியை இத்தகைய மாணவர்களில் வளர்க்க எதுவும் செய்யாமல் இருப்பது ஒரு குறையே. அரசு IIT entrace exam coaching centerகளை ஆரம்பித்து அவற்றில் இத்தகைய மாணவர்களை இலவசமாகவோ குறைந்த கட்டணத்திலோ சேர்த்துக்கொள்ளவேண்டும் என்ற ஒரு ஆலோசனையை முன்வைத்துள்ளது கட்டுரை. ஆனால் நம் அரசியல்வாதிகள் பைசா செலவில்லாமல் இட ஒதுக்கீடு மட்டும் செய்துவிட்டு ஓட்டுக்களை வாங்கிவிட துடிக்கிறார்கள். என்ன செய்வது?

மேலும் கட்டுரையில் உள்ள புள்ளி விவரத்தின்படி, பல்வேறு மாநிலங்களில் OBCயில் அடங்கும் ஜாதிகளைச்சேர்ந்த பலர் நிலபுலன்கள் உள்ளவர்களாகவோ அரசியலில் முன்னணியில் உள்ளவர்களாகவோ இருப்பதால் அவர்களுக்கு ஒதுக்கீடு தேவையில்லை என்பது தெளிவாகிறது. MBC எனப்படும் Most Backward Castesஐ சேர்ந்தவர்களுக்கு மட்டும் ஒதுக்கீடு வழங்கினால் போதும் என்றே தோன்றுகிறது.

அடுத்த கட்டுரை பிரபல எழுத்தாளர் ஜெய்பிரகாஷ் நாராயணன் எழுதியது. இவர் இந்திய அரசியலில் உள்ள ஓட்டைகளை எதிர்த்து போராடும் லோக் சத்தா என்ற அமைப்பை நடத்தி வருபவர். இட ஒதுக்கீடு அதன் உண்மையான நோக்கத்தை அடையச்செய்ய சில ஆலோசனைகளை முன்வைத்துள்ளார். நான் கவலைப்பட்டது போலவே IIT, IIM போன்றவற்றின் தரத்தைப்பற்றி கவலைப்பட்டுள்ளார். (உடனே இவற்றிற்கெல்லாம் என்ன பெரிய தரம் உள்ளது என்று விதண்டாவாதம் செய்யவேண்டாம். இந்தியாவை பொறுத்தவரை இவற்றைவிட தரத்தில் உயர்ந்தவை ஏதும் இல்லை என்பது அனைவரும் அறிந்ததே). தரத்தை இழக்காமல் அதேசமயம் இட ஒதுக்கீட்டையும் செயல்படுத்த இவர் கூறும் ஆலோசனை OBCக்கு ஒரு cutoff வைத்துக்கொள்ளவேண்டும் என்பது. அதாவது, ஜாதியை மட்டும் பிரதானமாக வைத்து இடத்தை நிரப்பாமல் மதிப்பெண்களுக்கும் சேர்த்து மதிப்பு கொடுக்கவேண்டும்! உதாரணத்துக்கு, IITல் உள்ள இடங்கள் எல்லாவற்றையும் நுழைவுத்தேர்வில் 80%க்கு மேல் எடுத்த மாணவர்களை கொண்டு நிரப்பிவிடமுடியும் என்று வைத்துக்கொள்வோம். இப்போது ஜாதியை நுழைப்போம். பிற்பட்ட ஜாதியை சேர்ந்தவராய் இருந்தால் குறைந்தபட்சம் 70% மதிப்பெண் எடுத்திருந்தால் போதும் என்று சலுகை கொடுப்போம். ஒதுக்கியுள்ள 27% இடங்களை இவ்வாறு நிரப்பமுடியாவிட்டாமல் மீதி இடங்களை 80%க்கு மேல் எடுத்த மற்ற மாணவர்களுக்கு வழங்கவேண்டும். இப்போதுள்ள அரசின் அணுகுமுறையின்படி பிற்பட்ட ஜாதியை சேர்ந்தவர் 60%, இல்லை 50% எடுத்திருந்தால்கூட அவருக்கு இடம் கிடைக்க வாய்ப்புண்டு. இதுதான் ஏற்க இயலாததாக உள்ளது.

அடுத்தது 50% வரை இட ஒதுக்கீடு கொடுக்கலாம் என்ற சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பில் கூடவே வழங்கிய இரண்டு ஆலோசனைகளை சாமர்த்தியமாக கைவிட்டுள்ளது அரசு. ஒன்று, creamy layer separation. அதாவது பிற்படுத்தப்பட்ட ஜாதியை சேர்ந்த மாணவனின் குடும்பம் வசதியுள்ளதாக இருந்தால் அவனுக்கு இட ஒதுக்கீடு தேவையில்லை. இன்னொன்று, எத்தனை ஆண்டுகள் இந்த ஒதுக்கீடு அமுலில் இருக்கும் என்ற நிர்ணயம். காலவரையற்ற ஒதுக்கீடு அர்த்தமில்லாதது. பத்து அல்லது இருபது ஆண்டுகளுக்குப்பிறகு மறுபரிசீலனை செய்யவேண்டும். ஜெய்பிரகாஷ் நாராயணன் மண்டல் கமிஷன் ரிப்போர்ட்டே 25 ஆண்டுகளுக்கு முந்தியது என்பதால், அதில் குறிப்பிட்டள்ள எல்லா ஜாதிகளுக்கும் ஒதுக்கீடு தேவையா என்று மறுபரிசீலனை செய்யவேண்டும் என்கிறார். 25 ஆண்டுகளில் ஒரு தலைமுறையே மாறியிருக்கும் இல்லையா?

இந்த மாற்றங்களை அரசு செயல்படுத்துமானால் IIT, IIMல் இட ஒதுக்கீடு எனக்கு ஏற்புள்ளதாக கருதுகிறேன். ஆனால் தனியார் நிறுவனங்களில் ஒதுக்கீடு என்பதில் எனக்கு சுத்தமாக உடன்பாடில்லை. கல்வியில் இட ஒதுக்கீடு கொடுத்து அவர்களும் அக்கறையாக படித்து முன்னேறியபின் திறமையை மட்டுமே நம்பி வேலைவாய்ப்பு பெறவேண்டும். அதுதான் அம்மாணவனுக்கு தன்னம்பிக்கையும் ஊக்கமும் கொடுக்கும். யாரோ சொன்னதுபோல் - மீன்பிடிக்க கற்றுக்கொடுங்கள், மற்றவனின் மீனை பிடுங்கி அவனுக்கு கொடுக்காதீர்கள். அது நிலைக்காது.

Sunday, April 16, 2006

எஸ்.வி.சேகர் vs நெப்போலியன் vs பொருளாதார நிபுணர்

மயிலாப்பூர் தொகுதியில் தேர்தலில் நிற்கும் வேட்பாளர்கள் அதிமுக சார்பில் எஸ்.வி.சேகர், திமுக சார்பில் நெப்போலியன் என்பது நிறைய பேருக்கு தெரிந்திருக்கும். அது யார் பொருளாதார நிபுணர் என்று கேட்கிறீர்களா? லோக் பரித்ரான் என்ற புதிய கட்சியை பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். IITயிலும் பின்னர் அமெரிக்காவிலும் படித்துள்ள இளைஞர்கள் சிலர் சேர்ந்து ஆரம்பித்துள்ள கட்சி இது. இந்த கட்சியின் சார்பாக சந்தானகோபாலன் என்கிற வேட்பாளர் போட்டியிடுகிறார். இவர் நியூ யார்க்கில் M.A. பொருளாதாரம் படித்துள்ளார்.

அரசியல் சாக்கடையில் தைரியமாக குதித்துள்ள இந்த இளைஞர்களைப்பற்றி இந்த சுட்டியில் விவரம் அறியலாம். அவர்களின் வலைத்தளம் http://www.lokparitran.org. அரசியல் கட்சிகளில் நம்பிக்கை இழந்து வாக்குச்சாவடி பக்கமே போகாமல் இருப்பவர்களை ஓட்டுப்போட வைக்கப்போகிறோம் என்கிறார்கள் இவர்கள். மயிலாப்பூர் மட்டுமன்றி வேறு சில தொகுதிகளிலும் நிற்கிறார்கள் இக்கட்சி வேட்பாளர்கள். விவரங்களை மேற்கண்ட சுட்டியில் அறியலாம். நீங்களோ உங்கள் உறவினரோ மயிலாப்பூரில் இருந்தால் இந்த கட்சிக்கு ஓட்டுப்போடுவதைப்பற்றி அவசியம் யோசியுங்கள். ஒருபக்கம் எஸ்.வி.சேகரின் விவகாரமான காமெடியை நினைத்துப்பாருங்கள். இன்னொரு பக்கம் நெப்போலியனின் மீசையை வைத்துக்கொண்டு நாட்டுக்கு என்ன செய்யமுடியும் என்று யோசியுங்கள். அந்தாளை விட பொருளாதாரத்தில் மேற்படிப்பு படித்த சந்தானகோபாலன் நிறையவே சாதிக்கமுடியும் இல்லையா?

Saturday, April 08, 2006

IIT, IIMல் மேலும் இட ஒதுக்கீடு தேவையா?

இந்தியா உலக அரங்கில் பெருமளவு பேசப்படும் இந்த சமயத்தில் நாட்டின் மிக முக்கியமான கல்விக்கூடங்களான IIT, IIMல் இப்படி ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு தேவையா? இத்தனை நாட்கள் நாட்டின் மிகச்சிறந்த மாணவர்களை தேர்ந்தெடுத்து கல்வி புகட்டும் இடங்களாக திகழ்ந்த இவற்றின் கல்வித்தரம் இனி என்ன ஆகும்? இதுவரை SC, ST மாணவர்களுக்கு மட்டும் 22.5% ஒதுக்கீடு என்று இருந்த நிலைமை போய் இப்போது கிட்டத்தட்ட 50% ஒதுக்கீடு என்று ஆகப்போகிறதாம்.

பொதுவாக இட ஒதுக்கீட்டிற்கு நியாயம் கற்பிக்க கூறப்படும் வாதம் அந்த காலத்தில் (எப்போதோ) பிராமணர்களை மட்டும் கல்விக்கூடங்களில் சேர்த்துக்கொண்டதாம். அதற்குப் பரிகாரமாக குறைந்த மதிப்பெண் பெற்ற சில பிற்படுத்தப்பட்ட ஜாதி மாணவர்களை அவர்கள் தகுதிக்கு மீறிய கல்விக்கூடங்களில் சேர்த்துவிட்டால் போதுமா? ஜாதி வித்தியாசம் இல்லாமல் எல்லா ஜாதியிலும் அறிவில் சிறந்த மாணவர்கள் நிச்சயம் இருக்கிறார்கள். அவர்களுக்கு இத்தகைய கல்விக்கூடங்களில் சேர்வதற்கு ஒதுக்கீடு எதுவும் தேவையில்லை. நானும் தமிழ்நாட்டின் மிகச்சிறந்த கல்விக்கூடம் ஒன்றில் இன்ஜினியரிங் படித்து எல்லாவற்றையும் பார்த்திருக்கிறேன். என்னதான் சிறந்த கல்விக்கூடத்தில் படித்தாலும் வேலைவாய்ப்பு தேடும்போது அவரவர் திறமை மட்டுமே கைகொடுக்கும்.

கல்வித்தரம் பற்றி யோசிப்போம். எனக்கு தெரிந்தவரை IIT தேர்வுகள் எல்லாம் மிகக்கடினமாக இருக்கும். வகுப்பில் ஏதோ சிலபேர் சராசரி மாணவர்களாக இருந்ததுபோய் பாதிப்பேர் சராசரியாக ஆகிவிட்டால் பேராசிரியர் எப்படி கடினமான தேர்வுகள் வைக்கமுடியும்? சரி, இட ஒதுக்கீட்டில் சேர்ந்தவர்கள் பாதிப்பேர் எப்படியோ சமாளிக்கிறார்கள் என்று வைத்துகொண்டாலும், 25% தேர்ச்சி பெறக்கூட முடியாதவர்களாக போனால் கல்விக்கூடத்தின் பெயர் கெட்டுப்போகாதா? ஏதோ ஒரு விளங்காத காலேஜின் பெயர் கெட்டுப்போனால் பரவாயில்லை. இந்திய மாணவர்களின் காலில் வெளிநாட்டுக் கம்பெனிகள் வந்து விழச்செய்த இந்த இரு கல்வி நிறுவனங்களுக்கும் இந்த நிலைமை வரக்கூடாது. பேர் கெடக்கூடாது என்பதற்காகவே தேர்வின் கடினத்தை குறைக்கவேண்டிய நிலைமைக்கு பேராசிரியர்கள் தள்ளப்படுவார்கள் என்றே எனக்கு தோன்றுகிறது.

ஒரு வாதத்திற்காக அமெரிக்காவில் கல்வி நிலைமையை எடுத்துக்கொள்வோம். இங்கு ஒரு காலத்தில் ஆப்பிரிக்க (கறுப்பு) இனத்தவர்கள் அடிமைகளாக நடத்தப்பட்டார்கள். மார்ட்டின் லூதர் கிங் போன்றவர்களின் போராட்டத்திற்கு பிறகு அவர்களுக்கு சம உரிமை வழங்கப்பட்டிருக்கிறது. அவர்களை பள்ளியில் சேர்ப்பிக்க எல்லா வகையிலும் அரசாங்கம் உதவி செய்யும். ஆனால் கல்வியில் இட ஒதுக்கீடு எல்லாம் கிடையாது. அவர்களுக்கு திறமை இருந்தால் மட்டுமே அவர்கள் முன்வர முடியும். ஏன், அவர்களும் ஒரு காலத்தில் ஒடுக்கப்பட்டவர்கள் என்று சண்டை போட்டு இட ஒதுக்கீடு கேட்கலாமே? அப்படி நடந்திருந்தால் அமெரிக்க கல்விக்கூடங்கள் உலகில் சிறந்தவைகளாக இருந்திருக்குமா என்பது கேள்விக்குறியது.

இந்த ஒதுக்கீடு மட்டும் நடைமுறைக்கு வந்தால் என்ன நடக்கும் என்று யோசிப்போம். CBSC (சென்ட்ரல் போர்ட்) பள்ளிகளில் படிக்கும் நிறைய முற்பட்ட ஜாதி மாணவர்களின் IIT கனவுகள் சிதறும். பாதி இடங்கள் மட்டுமே மிச்சமுள்ள IITக்காக தயார் செய்வதா, இல்லை state board syllabusம் சேர்த்து படித்து மற்ற கல்லூரிகளுக்கும் தயார் செய்வதா என்று அவர்கள் குழம்பிப்போவார்கள். கொஞ்சம் பணவசதி உள்ள குடும்பம் என்றால் 'இதெல்லாம் சரிவராது. நீ பேசாமல் அமெரிக்கா போய் படி' என்பார் அப்பா. மேற்படிப்புக்கு அமெரிக்கா போவது என்பதுபோய் சின்னவயதிலேயே அமெரிக்கா போகும் நிலைமைக்கு தள்ளப்படுவான் அந்த மாணவன். பணவசதி இல்லாத முற்பட்ட ஜாதி மாணவர்கள் CBSC பக்கமே போக பயப்படுவார்கள். state boardல் படித்தால் அட்லீஸ்ட் நம் (பெருந்தன்மையுள்ள) அரசியல்வாதிகளின் பினாமி இன்ஜினியரிங் காலேஜ் ஏதாவது ஒன்றில் இடம் கிடைக்குமே!

ஏதோ ஒரு கட்டுரையில் படித்ததுதான் ஞாபகம் வருகிறது. 'India's growth is not because of the government. it grows in spite of the government'. சத்தியமான வார்த்தை!