மலரும் நினைவுகள் - 2 (பள்ளிக் குறும்புகள்)
உனக்கு ஒரு நண்பன் இருந்தான். அன்னிக்கு அவன் உனக்கு முன் பெஞ்சுல உட்கார்ந்திருந்தான். என்ன தோணிச்சோ என்னவோ க்ளாஸ் நடக்கும்போதே அவன் shirt-ல முதுகுப்பக்கம் முட்டாள்-னு பென்சில் வெச்சு எழுதிட்டே. கவனமா அவனுக்கு தெரியாம தான் எழுதனும்னு பார்த்தே.. ஆனா அவன் கண்டுபிடிச்சிட்டான்.. 'மிஸ்.. இவன் என் முதுகுல என்னவோ எழுதிட்டான்'னு போட்டு குடுத்துட்டான். சுல்தான் டீச்சர் வந்து பாத்துட்டு என்ன செஞ்சாங்க ஞாபகம் இருக்கா.. வாழ்நாள் பூரா ஞாபகம் இருக்கற மாதிரியில்ல பண்ணிட்டாங்க... திக்கா பேனாவால முதுகுல FOOLனு நீ எழுதுனத விட பெரிசா எழுதிட்டாங்க.. வீட்டுக்கு போகும்போது ஒரு வீதி தான்னாலும் அதை யாரும் பாத்துடக்கூடாதுன்னு நீ ஓரமா ஒளிஞ்சு ஒளிஞ்சு போனபோது உனக்கு நீ செஞ்ச தப்பு நல்லா புரிஞ்சுடுச்சு.
நீ பொதுவா பார்த்தா ரொம்ப அமைதியான பையன்னே சொல்லுவாங்க.. ஆனா ஏழாவது படிக்கும்போது இது மாதிரி ஒருதடவை டோஸ் வாங்கினே.. அப்போ ஒவ்வொரு க்ளாஸ்க்கும் ஒரு லீடர் இருப்பான். அவன்தான் வாத்தியார் வராத நேரங்கள்ல வகுப்புல சத்தம் இல்லாம பார்த்துக்கனும். எப்போதும் கொஞ்சம் திடகாத்திரமான பையனா பார்த்துத்தான் லீடரா போடுவாங்க. ஆனா என்ன காரணமோ, நோஞ்சானா குரலே எடுக்காத உன்னைப்போய் லீடரா போட்டுட்டாங்க. உனக்கு உதவியா ஒரு குண்டுப்பையன் இருந்ததா ஞாபகம். ஒருநாள் ஒருமணி நேரத்துக்கு சார் வரலை. அன்னிக்கு வெள்ளிக்கிழமைன்னு நினைக்கிறேன். பசங்க சந்தோஷத்துக்கு கேக்கவா வேணும்.. காச்மூச்னு கத்திக்கிட்டிருந்தாங்க.. நீயும் கொஞ்சம் சாதாரணமா சொல்லிப்பாத்த.. 'கத்தாதீங்கடா'ன்னு.. கேப்பானுங்களா.. ம்ஹும்... உனக்கு வந்ததே ஒரு கோபம்... ஒரு கூச்சல் போட்டு அடக்கிடலாம்னு கத்தப்போய்.. பசங்க அடங்கிட்டாங்க... ஆனா உன் கூச்சலால இல்லை.. பக்கத்து க்ளாஸ் வாத்தியார் வந்ததால.. வேடிக்கை இதோட முடியல. அவர் உன்னை தனியா கூட்டிட்டு போய், ஏண்டா கூச்சல் போட்டே-ன்னு நாலு சாத்து முதுகுல சாத்துனாரு பாரு... அதுக்கப்புறம் நீ ஏன் க்ளாஸ் லீடர் ஆகப்போறே..
பாட்டி சொல்ற ஒரு பழமொழி தான் நினைவுக்கு வருது - "தென்னை மரத்துல தேள் கொட்டினா பனைமரத்துல நெரி கட்டிச்சாம்."



