Send As SMS
My Photo
Name:Venkataramani
Location:California, United States

தமிழில் வலைப்பதிவுகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக தோன்றிய அந்த காலத்தில் (2003) ஏதோ ஒரு ஆர்வக்கோளாறில் நானும் எழுத ஆரம்பித்தேன். நமக்கு பல விஷயங்களில் ஆர்வம் இருப்பதால், சில நாட்களுக்கு எதுவும் எழுதாமல் இருக்க வாய்ப்புண்டு. ஆனாலும், பீனிக்ஸ் பறவைபோல் மீண்டுவந்து கண்டிப்பாக இந்த வலைப்பதிவை இன்னும் பல வருடங்களுக்கு உயிருடன் வைத்திருப்பேன் :)

Wednesday, June 14, 2006

ரசிக்கக்கூடிய ஆறு (விளையாட்டு)

'ஆறு மனமே ஆறு.. அந்த பொன்ஸின் கட்டளை ஆறு'னு என்னை இந்த ஆறு விஷய விளையாட்டுக்கு இழுத்த எங்கள் ஆற்றலரசி, ஆனைவிரும்பி அவங்களுக்கு நன்றி சொல்லி ஆரம்பிக்கிறேன். 'திருவிளையாடல்' படத்துல சிம்மக்குரலோன் சிவாஜி ஔவைப்பாட்டியிடம் 'ஒன்று, இரண்டு, மூன்று என்று என்னை வரிசைப்படுத்தி பாடு'னு சொல்வார். அந்தமாதிரி ஒன்று, இரண்டு, மூன்றுனு வரிசைப்படுத்தி எழுதிட்டாங்க பொன்ஸ்.. நானும் அதேமாதிரி எழுதறேன்.

ஒன்று இல்லாவிட்டால் நான் தவித்துப்போவேன் - அது இணையம். கடைசியா வீட்டை மாத்தினப்போதான் இதை புரிஞ்சுக்கிட்டேன். இணையதொடர்பு கிடைக்காத அந்த நாலுநாள் ஏதோ உலகமே இருண்டுட்ட மாதிரி நினைப்பு.. பொறந்ததுல இருந்தே ஜிமெயில் பயன்படுத்துனமாதிரி அதை பார்க்கமுடியாம கை சும்மா இருக்கமுடியலை.

இரண்டு நிகழ்ச்சிகள் -
1. 12 வருசம் ஆம்பிளைப்பசங்க மட்டும் படிக்கற ஸ்கூல்ல படிச்சுட்டு கோ-எட் காலேஜ்ல சேர்ந்த முதல் வருஷம் அது. பொண்ணுங்களோட சகஜமா பேசினதே கிடையாது. புத்தகங்கள் வாங்கற கோ-ஆப் ஸ்டோர்ல இருக்கும்போது ஒரு பொண்ணு சாக்லேட் டப்பா காண்பிச்சி 'பர்த்டே'னு சொல்லி எடுத்துக்க சொன்னா.. நமக்கா இங்கே வயத்துக்குள்ள பூச்சிகள் ஊருது. எதாவது பேசணுமே.. என்ன பேசறதுனு வேற தோண மாட்டேங்குது. கடைசியா ஒருவழியா பேசியாச்சு.. ஆனா நான் கேட்ட கேள்வியை நாலு வருஷம் கழிச்சு, ஏன் இப்பகூட அந்த நல்ல நண்பி மறந்துருக்க மாட்டான்னு நினைக்கிறேன். நான் கேட்டது... 'யாருக்கு பர்த்டே?'!! ஏண்டா, மத்தவங்க பர்த்டேக்கு நான் சாக்லேட் கொடுப்பேனானு அவ நினைச்சு நினைச்சு சிரிச்சிருப்பா..
2. யூ.எஸ் வந்த புதுசில் கார் இல்லாமல் டிரெயினில் பயணம் செய்தபோது தவறுதலாய் இறங்கவேண்டிய ஸ்டேஷனுக்கு முந்தையு ஸ்டேஷனிலேயே இறங்கி, அட ஒரு ஸ்டேஷன்தானேன்னு ட்ரெயின் ட்ரேக்கை தொடர்ந்து நடக்க ஆரம்பிச்சு ஒருமணிநேரம் நடந்தது. இதுல ஆளில்லா வீதியில் நடக்கும்போது எங்கே எவனாவது திருடன் பிடிச்சுக்கப்போறானோன்னு பயம்வேற!!

என் மனதுக்கு நெருக்கமான மூன்று விஷயங்கள்
1. மென்பொருள் - கடந்த ஒரு மாசத்துல நான் செஞ்சது எல்லாம் பார்த்திருப்பீங்க. மேல சொல்றதுக்கு ஒண்ணுமில்லை.
2. தமிழில் எழுதுவது - சின்ன வயசுல கையெழுத்து பத்திரிகை தொடங்கி கிறுக்கினதுல ஆரம்பிச்சது (பொன்னியின் செல்வன் மாதிரி ஒரு சரித்திர நாவல் எல்லாம் முயற்சி பண்ணி அதை என்னைத்தவிர இன்னொருத்தனையும் படிக்க வெச்சேன் தெரியுமா?). நடுவுல கம்ப்யூட்டர் வந்து இந்த ஆர்வத்தை கபளீகரம் பண்ணிடுச்சு. மறுபடி இணையத்துல தமிழை பாத்ததும் எழுதனும்னு தோணி எப்பவாவது ஒருதரம் எழுதிட்டிருக்கேன்.
3. இந்தியா - மறுபடி சின்ன வயசுல ஸ்கூல்ல "india is my country. all indians are my brothers and sisters"னு வாராவாரம் pledge சொன்னதாலோ என்னவோ, ஜாதி, மத அடையாளங்களைவிட இந்தியன்கிற அடையாளம்தான் முக்கியமா படுது. என்னால முடிஞ்ச உதவிகளை நாலு வருஷம் ஒரு லாபத்துக்கல்லாத இயக்கம் மூலமா செஞ்சிருக்கிற திருப்தி இருக்கு.

மறக்கமுடியாத நான்கு திரை கதாபாத்திரங்கள்
1. காமேஷ்வரன் - படம் 'மைக்கேல் மதன காம ராஜன்'. கமலோட அற்புதமான நடிப்பு மற்ற கதாபாத்திரங்கள்ல வெளிப்பட்டிருந்தாலும் இதுல அவரோட பாஷையும் முகபாவனைகளும் ரொம்பவே ரசிக்கும்படியா இருந்தது. 'நேக்கா.. நோக்கா.. நேக்கும் நோக்குமா' ;))))
2. ரமணாவில் விஜய்காந்த் - எனக்கு அவரது மிடுக்கான நடிப்பும் கோபம் மற்றும் சோக காட்சிகளில் காட்டும் தத்ரூபமும் மிகவும் பிடிக்கும். அதுக்காக அவரோட கட்சிக்கு எல்லாம் சப்போர்ட் கிடையாது (இதுவரை).
3. Tom hanks - நடிப்புக்கு இலக்கணம். எந்த கதாபாத்திரத்தில் நுழைகிறாரோ அதாகவே மாறிவிடும் ஹாலிவுட் கமல்! Cast Away படத்தில் அவரோடு சேர்ந்து நாமும் அந்த தீவில் போராடி சோகத்தில் ஆழ்ந்து வெளிவருமாறு செய்திருப்பார். சமீபத்தில் 'The Terminal' பார்த்தேன். அச்சு அசல் ஒரு ஐரோப்பியரைப்போல உடைந்த ஆங்கிலத்தில் வெளுத்து வாங்கியிருந்தார்.
4. Aamir khan - நிரந்தர காலேஜ் மாணவர் ;) ஆனால் நாற்பது வயதானாலும் குறும்புத்தனமான நடிப்பைக்காட்டி நம் வயதையும் சேர்த்து குறைப்பவர். Dil Chahta Hai பார்த்தவர்கள் நிச்சயம் ஒத்துக்கொள்வார்கள்.

எங்கோ இழுத்துச்செல்லும் ஐந்து பாடல்கள்
1. வெள்ளைப்புறா ஒன்று - ஸ்கூல் விடுமுறையின்போது விழுப்புரத்தில் ரோஸ்மில்க் குடித்துக்கொண்டே கேட்டது
2. காதல் ரோஜாவே - +2வில் இந்தப்பாட்டையும் விளங்காத பிஸிக்ஸையும் இணைந்து படித்தது
3. டேக் இட் ஈஸி ஊர்வசி - காலேஜ் ஹாஸ்டலில் ஓட்டை டேப் ரிக்கார்டில் இந்தப்பாட்டை தேயும்வரை போட்டு ரகளை செய்தது
4. கோயீ லட்கீ ஹே - பெங்களூரில் ஷாரூக்கான் பைத்தியமான நண்பி இந்தப்படத்தில் உருகுவதை பார்த்து கிண்டலடித்தது
5. கண்ணாமூச்சி ஏனடா - யூ.எஸ் வந்த புதுசில் தமிழ்ப்படமே பார்க்கமுடியாமல் காய்ந்து, முதல் முதலில் நம்ம ஐஸ் படத்தை பார்த்து குளிர்ந்தது.

நான் கவுக்கப்போகும் ஆறு வலைநண்பர்கள்
1. டுபுக்கு - மற்றவரை கிண்டல் செய்யாமல் சிரித்து ரசிக்கவைக்கும்படி எழுதும் சொல்லின் செல்வர்
2. தளபதி சிபி - கச்சிதமா எழுதினாலும் நச்னு எழுதறவர்
3. செல்வன் - கடவுளுக்கே புது விளக்கம் சொன்ன பல்துறை வல்லுநர்
4. உஷா - மனசுல படறதை அப்படியே வார்த்தைகளில் வெளிப்படுத்தும் அருமை எழுத்தாளர்
5. குமரன் - கோளறுபதிகமும் அலசுவார், நேத்து வந்த பாட்டையும் அலசுவார் குமரன்
6. சுகா - பென்சிலை வைத்து சிலைவடிக்கும் ஓவியர் மற்றும் கவிஞர்

அப்பாடா.. சொன்னபடியே ரசத்தோட (சாம்பார், கறியோடயும்) எழுதியாச்சு. எப்படி இருக்குனு படிச்சுப்பாத்து சொல்லுங்க. அப்புறம், 'ஆறு'னு புது குறிச்சொல் உருவாக்கியிருக்கேன். இனிமேல இந்த ஆறு விளையாட்டு விளையாடறவங்க எல்லாரும் தமிழ்மணத்துல் இடுகையை சேர்க்கும்போது அந்த குறிச்சொல்லை தேர்ந்தெடுத்தீங்கன்னா எல்லாரோட 'ஆறு'களையும் சுலபமா ஒரே இடத்துல பார்க்கமுடியும். செய்றீங்களா?


Post a comment (No need to give Email/URL)
comments so far.



<< Home